ஸிகா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க ரூ.383 கோடி நிதி தேவை: உலக சுகாதார நிறுவனம்…!!
அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் ஸிகா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் 34 நாடுகளில் இந்த நோய் பரவி இருக்கிறது. இது தவிர, மேலும் 5 நாடுகளிலும் அவை பரவி உள்ளன.
இதை தடுக்க இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே, உலகம் முழுவதும் இந்த நோய் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸிகா வைரஸ் நோயை தடுப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இப்போது நோயை தடுக்க 56 மில்லியன் டாலர் நிதி (ரூ.383 கோடி) தேவைப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 25 மில்லியன் டாலர் உலக சுகாதார நிறுவனத்திற்கும், மீதியுள்ள நிதி நோய் பரவி உள்ள 39 நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலும் தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கவும் பயன்படுத்தப்படும் என்று உலக சுகாதார நிறுவன டைரக்டர் ஜெனரல் மார்க்கரெட் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, ஸிகா வைரஸ் நோய் நரம்பு மண்டலத்தை தாக்கி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளை கடுமையாக பாதிக்கிறது. எனவே, இது ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கூட்டிணைந்து இதை தடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று கூறினார்.
Average Rating