சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கொன்ற மருமகள்..!!
சிதம்பரம் ஜவகர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி சார்லஸ் (வயது 38). இவரது மனைவி சோபியாஷைனி (29). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அந்தோணி சார்லஸ் சிதம்பரம் வடக்குரத வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். காலை 7 மணிக்கு மளிகை கடைக்கு செல்லும் அந்தோணி சார்லஸ் வியாபாரம் முடிந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
இதற்கிடையே சோபியாஷைனி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை அறிந்த அந்தோணி சார்லஸ் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் சோபியாஷைனி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. கணவன் மளிகை கடைக்கு சென்ற பின்னர் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து பழகி வந்தார். இதையடுத்து கள்ளக்காதலனுடன் மனைவி பழகுவதை தடுக்க அந்தோணி சார்லஸ் தனது தாயார் ராஜரீக மேரியை (62) தனது வீட்டுக்கு அழைத்து வந்து காவலுக்கு வைத்திருந்தார்.
நேற்று காலை வழக்கம் போல அந்தோணி சார்லஸ் மளிகை கடைக்கு சென்று விட்டார். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் சோபியாஷைனியும், ராஜரீக மேரியும் இருந்தனர். இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் சோபியாஷைனி கணவனுக்கு போன் செய்து ராஜரீக மேரி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாகவும், தற்போது ராஜரீகமேரி மயங்கிய நிலையில் உள்ளதாக கூறினார். இதனால் பதறியடித்துக்கொண்டு அந்தோணி சார்லஸ் வீட்டுக்கு வந்தார். அப்போது முகத்தில் படுகாயத்துடன் தாய் இறந்து கிடப்பதை பார்த்து அந்தோணி சார்லஸ் அதிர்ச்சி அடைந்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்தது.
தனது தாய் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்தோணி சார்லஸ் இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சோபியா ஷைனியாவை பிடித்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜரீக மேரியை கொலை செய்ததை சோபியா ஷைனி ஒத்துக்கொண்டார். ராஜரீகமேரி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததாகவும், மேலும் ஆத்திரம் தீராமல் முகத்தில் சரமாரியாக தாக்கியதாக சோபியா ஷைனி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து சோபியா ஷைனியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating