கண்ணீர் புகைத்தாக்குதலைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்…!!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பட்டதாரிகள் சங்கத்தினரால் கொழும்பு புறக்கோட்டையில் கடந்த செவ்வாய்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் கண்ணீர் புகைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (21) காலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வேலையில்லாப் பட்டாதாரிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது, கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அண்மையில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்திருந்தனர்.
அன்றைய தினம் வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தையில் அதிக வாகன நெரிசல்; ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கும் உள்ளாகினர்.
பொலிஸாரினால் முன்னதாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவை மீறியே வேலையில்லாப் பட்டாதாரிகள் அந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக அகில இலங்கை வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.
Average Rating