பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கிலப் பரீட்சை கட்டாயம் எழுதவேண்டும்
பிரிட்டனில் குடியேறியவரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆங்கிலப் பரீட்சை எழுதவேண்டியது கட்டாயமென பிரிட்டனின் குடியேற்றத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் பிரிட்டனில் வசிப்பவர்களைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறியுமுள்ளனர். இதேபோல் ஐரோப்பிய நாடுகளைச் சேராத 20 ஆயிரம் பேரும் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். பிரிட்டனில் இருப்பவரை திருமணம் செய்து கொள்வோர் அங்கு வசிப்பதற்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் தெரியாதவருக்கு வேலை கிடைப்பதில் சிரமம், பிறருடன் பேசமுடியாததால் ஒதுக்கி வைக்கப்படும் நிலை போன்றவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், இதுபோல ஆங்கிலம் தெரியாத காரணத்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் என்ற காரணங்களுக்காகவே அவர்கள் கட்டாயம் ஆங்கிலப் பரீட்சை எழுதி சித்தியெயய்தினால் தான் விசா வழங்கப்படும். ஐக்கிய ஐரோப்பிய நாடுகளைச் சேராத அனைவருக்கும் இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆங்கிலப் பரீட்சை அவசியம் தான் என்று அரசு நியாயப்படுத்துகிறது. இவ்விடயம் தொடர்பில் பிரிட்டனின் குடியேற்றத்துறை அமைச்சர் லியாம் பிர்னே தெரிவிக்கையில், பிரிட்டனுக்கு குடியேறுபவர்கள் கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இதில் எந்த குழப்பமும் இல்லை. ஆங்கிலம் பேசவேண்டும், சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். எங்கள் எல்லோரையும் போல வரிசெலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.