தண்டையார்பேட்டையில் 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்…!!
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள வைத்தியநாதன் தெருவில் 50–க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.
இன்று அதிகாலை மங்கம்மா என்பவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவியது.
அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து குடும்பத்துடன் வெளியே ஓடினர். அப்போது மங்கம்மாவின் கையில் தீக்காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, கொடுங்கையூரில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் 10 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, டி.வி. உள்ளிட்ட பொருட்கள் நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாச வேலை காரணமா? என்பது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating