கள்ளக்காதலுக்கு உதவும் காயின் போன்கள்
இடைப்பாடி பஸ் நிலைய ஒதுக்குப்புறமான இடங்களில் இயங்கிவரும் காயின் போன்களில் கள்ளக்காதல் விவகாரம் முதல் கல்லூரி மாணவர்களின் பொழுதுபோக்கு வரை பல சமூக சீர்கேடான விஷயங்களுக்கு இந்த ஒரு ரூபாய் காயின் போன்கள் துணை போகின்றன. இடைப்பாடி பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் பேரங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 75-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கடைகள், ஓட்டல்கள் என இயங்கி வருகின்றன. இங்கு கடைகளுக்கு நடுவே சுமார் 5 அடி அகல சந்து பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமாக இருந்து வருகிறது. இந்த இடத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய காயின் போன்கள் பல இடங்களில் தொங்க விடப்பட்டு உள்ளது. சற்றே வெளிச்சம் குறைவான இப்பகுதியில் உள்ள காயின் போன்களுக்கு பஸ் நிலைய பயணிகள் யாரும் வருவது இல்லை. இதற்கு மாறாக இடைப்பாடியை சுற்றி உள்ள பகுதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு திட்டமிட்டே தனது துணையை சந்திக்க வரும் கள்ளக்காதலர்கள், கல்லூரி செல்லாமல் ஊர் சுற்றும் மாணவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், போன் வழியாக குடும்ப பெண்களுக்கு ஆபாச வார்த்தை பேசி தொல்லை புரிவோருக்கும் இந்த இடம் புகலிடமாக அமைந்துள்ளது. மேலும் விபசாரம் மற்றும் போலீஸ் நடமாட்டம் பற்றி கண்காணித்து உளவு கூறும் சமூகவிரோதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த இடத்தை நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வார்களா என இப்பகுதி கடைக்காரர்களது நீண்ட எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.