சாத்தான்குளத்தில் போலீசில் புகார் கொடுக்க சென்றதால் மனைவியை கொலை செய்த கணவர்..!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 58). இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களுக்கு பீட்டர் பிரபாகர் (25), சாத்ராக் (21), மோசே (17), டேவிட் (10), ஆன்ட்ரூஸ் (8) என்ற 5 மகன்கள் உள்ளனர்.
கூலி தொழிலாளியான மோசஸ் கடந்த சில மாதங்களாக மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கணவரின் தொந்தரவு தாங்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூங்கோதை திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசில் கணவர் குறித்து புகார் செய்தார். அப்போது போலீசார் மோசசை அழைத்து இனிமேல் மனைவியுடன் தகராறு செய்யக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் இன்று மதியம் மோசஸ் மனைவியுடன் மீண்டும் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றுகையில் மோசஸ் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதையடுத்து பூங்கோதை போலீசில் கணவர் குறித்து போலீசில் புகார் செய்வதற்காக சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த மோசஸ் மனைவியிடம் போலீசில் புகார் செய்ய வேண்டாம். இனிமேல் நாம் சந்தோசமாக வாழலாம் என கூறி அவரை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் பூங்கோதை, ‘நான் கட்டாயம் போலீசில் புகார் செய்வேன்’ என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மோசஸ் அருகே கிடந்த உருட்டு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் பூங்கோதையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூங்கோதை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே மனைவியை அடித்து கொன்ற மோசஸ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து மோசசை கைது செய்தார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டபகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating