உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை…!!
உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூர் என்ற இடத்தில் வீட்டு வேலை செய்யும் சகோதரிகள் 2 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்களை கேலி செய்தனர். தொடர்ந்து பல மாதங்களாக இந்நிலை நீடித்ததால் சகோதரிகள் இருவரும் கேலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்களில் ஒருவன் துப்பாக்கியால் அந்த பெண்களை நோக்கி சுட்டான். இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவருடைய சகோதரி படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பெண்ணை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காயம் அடைந்த பெண் கூறுகையில், பல மாதங்களாக சில வாலிபர்கள் எங்களை கேலி, கிண்டல் செய்து வந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் போலீசில் புகார் அளித்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.
Average Rating