கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்…!!
500, 100 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
விருதுநகரிலும், சிவகாசியிலும் 500 மற்றும் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக, மதுரை கள்ளநோட்டு தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 18.2.2009-ல் சிவகாசியைச் சேர்ந்த அமீர் அம்சா (வயது 48), எம்.புளியங்குளத்தை சேர்ந்த மனோகரன் (45) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் சிவகாசியை சேர்ந்த செய்யது அக்பர் (43), வெள்ளைச்சாமி (44), கருப்பையா (42), சுடலை (43) ஆகியோரை பிடித்தனர். இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கேரளா மாநிலம் புதியதுறையை சேர்ந்த சசி (40), செவரையை சேர்ந்த ரவி (43) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளநோட்டு கும்பலுக்கு, கேரளா மாநிலம் செவரையை சேர்ந்த ஜெபஸ்டின் லேபஸ் (52) என்பவர் பண உதவி செய்ததும், கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த சுனில் (30) என்பவர் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் 10 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
விருதுநகர் சார்பு நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் பல்வேறு பிரிவுகளின்படி ஜெயில் தண்டனை வழங்கி ஏககாலத்தில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார்.
Average Rating