நடுக்கடலில் மூழ்கிய கார்த்திகா : படப்பிடிப்பில் பரபரப்பு
இனி மெரீனா பீச்சுக்கு காற்று வாங்கக்கூட போகாதஅளவிற்கு கடல் அலர்ச்சியில் இருக்கிறார் கார்த்திகா. விஜயன் – கார்த்திகா நடித்துவரும் படம் ‘அலையோடு விளையாடு’ இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள குளச்சலில் நடந்து வருகிறது. வில்லன்களாக நடிக்கும் பொன்வன்னண், மகாநதி சங்கர் ஆகியோரிடமிருந்து நாயகனும் நாயகியும் படகில் தப்பிச் செல்வதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரெடி டேக் என்று டைரக்டர் கே.ராகவன் குரல் கொடுத்ததும் கார்த்திகா இருந்த படகு கடலில் சீறிப்பாய ஆரம்பித்தது. கேமராமேன் ராஜ்ப்ரீத் இதனை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது படகு வேகமாக சென்றதால் பிடிமானம் இல்லாமல் திடீரென்று கடலில் விழுந்தார் கார்த்திகா. விழுந்த வேகத்தில் கடலுக்குள் மூழ்கவே படப்பிடிப்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். மீண்டும் நீருக்கு மேலே வந்த கார்த்திகா, கைகளை அசைத்து காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என குரல் கொடுத்தார். அவரது குரலை கேட்ட மீனவர்கள் சிலர் அந்த இடத்துக்கு விரைந்துவந்து கார்த்திகாவை காப்பாற்றி கரையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திகா சிகிச்சைக்குப் பிறகு திரும்பினார். கடலில் விழுந்தது குறித்து கார்த்திகாவிடம் கேட்டபோது, “கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்து இது. கடலில் விழுந்த நிமிடங்களில் இனி அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் மீனவர்கள் உருவத்தில் கடவுள்தான் என்னை காப்பாற்றினார்.” என ஆனந்த கண்ணீர் வடித்தார்.