மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பகிஸ்கரிப்பு…!! (படங்கள்)
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து இன்று புதன் கிழமை (24) மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் சகல விதமான போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்று வருகின்றது
வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து வடக்கில் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கண்டன ஊர்வலங்களும் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் தமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை 6 மணிமுதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்குமான சகல விதமான போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டது.
இதனால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்ளவிருந்த அரச திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மற்றும் உள்ளூர் சேவைகளும் இடம் பெறாமையினால் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தாமதித்தே பாடசாலைக்குச் செல்லக்கூடியதாக அமைந்திருந்தது.
எனினும் மன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.
பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது.
மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் மாத்திரமே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating