மதுரை மத்திய சிறையில் கைதி அடித்துக்கொலை: போலீசார் விசாரணை…!!
மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் செந்தில் (வயது33). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களாக இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி அருகே உள்ள அரசன் பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் சில மாதங்களுக்கு முன்பு தந்தை சவுந்திரபாண்டியை கொலை செய்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மனநிலை பாதிப்பு இருந்ததால் இவரும் செந்தில் அடைக்கப்பட்டு இருந்த அதே அறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக செந்திலுக்கும், செந்தில் குமாருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் 2 பேரும் மோதிக்கொண்டனர்.
நேற்று நள்ளிரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட 2 பேரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் செந்தில்குமார் தாக்கியதில் செந்தில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, கூடுதல் சூப்பிரண்டு தமிழ்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்திலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறார்கள்.
Average Rating