7 வயது சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு…!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் யுவராஜ் (வயது 7). அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். யுவராஜின் கழுத்தில் அவரது பெற்றோர் ஒரு கிராம் தங்க தாயத்து அணிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி தெருவில் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன்(32) என்பவர், யுவராஜ் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்தை அபகரிக்க திட்டமிட்டார்.
இதையடுத்து சிறுவனிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, அங்குள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் கழுத்தில் கிடந்த தங்க தாயத்தை அறுக்க முயன்றார். சுதாரித்து கொண்ட யுவராஜ், அதனை பறிக்க விடாமல் தடுத்தான். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், தான் அணிந்திருந்த துண்டால் யுவராஜின் கழுத்தை நெரித்து கொன்றார்.
இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி பிச்சம்மாள் தீர்ப்பளித்தார். அதில் சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating