புயலால் பாதிக்கப்பட்ட பிஜி நாட்டிற்கு 40 டன் உதவி பொருட்களை அனுப்புகிறது இந்தியா..!!
பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இந்த புயலின் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிப் போய் கிடக்கின்றன. பல லட்சம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்கள் நாசமடைந்தன.
சுமார் ஒன்பது லட்சம் மக்கள் வாழும் இந்த தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளில் புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பிஜி நாட்டிற்கு மருந்துப் பொருட்கள், உணவு உள்ளிட்ட 40 டன் உதவி பொருட்களை இந்தியா அனுப்புகிறது.
இந்திய விமானப் படை விமானம் மூலம் இந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சி-17 போக்குவரத்து விமானமானது முதலில் டெல்லியில் இருந்து 20 டன் பொருட்களுடன் சென்னை செல்கிறது. பின்னர் அங்கு 20 டன் பொருட்கள் ஏற்றப்பட்டு பிஜி நாட்டிற்கு கொண்டு செல்லப்படும்.
Average Rating