வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர், மாமனார்– மாமியாரிடம் போலீசார் விசாரணை…!!
ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த மேலகருவநல்லூரை சேர்ந்தவர் முருகன். தச்சு தொழிலாளி. இவருக்கும் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கீதா (வயது 21) என்பவருக்கும் கடந்த 22.3.2015 அன்று திருமணம் நடந்தது. தாய்–தந்தை இல்லாத கீதாவிற்கு அவரது தாய்மாமனார் ராமகிருஷ்ணன் என்பவர் தான் 4 பவுன் நகையை சீராக கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கீதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு முருனின் பெற்றோர் அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர். நேற்றும் இதுபோன்று கீதாவிடம் கூடுதல் நகை, பணம் கேட்டு அவரது மாமனார் பேச்சியப்பன், மாமியார் கிருஷ்ணம்மாள் தகராறு செய்துள்ளனர். இது குறித்து கீதா தனது தாய்மாமனார் ராமகிருஷ்ணனுக்கு போனில் தெரிவித்துள்ளார். அவர் நேரில் வந்து சமாதானம் செய்வதாக கூறி உள்ளார்.
இதன் பின்னர் நேற்று மாலை ராமகிருஷ்ணனுக்கு போன் செய்த பேச்சியப்பன், கீதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். இதையடுத்து மேலகருவ நல்லூருக்கு ராமகிருஷ்ணன் சென்ற போது வீட்டில் கீதா கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து ராம கிருஷ்ணன் சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கீதா உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கீதாவிற்கு திருமணமாகி ஒருவருடமே ஆவதால் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்.டி.ஓ. பெர்மி வித்யா விசாரணை மேற்கொண்டார். மேலும் சீதபற்பநல்லூர் போலீசார் கீதாவின் கணவர் முருகன், மாமனார் பேச்சியப்பன், மாமியார் கிருஷ்ணம்மாளை ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating