காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கிய அரசு சொகுசு பஸ்–கார் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்…!!
சென்னையில் இருந்து வேலூருக்கு நேற்று இரவு அரசு சொகுசு பஸ் வந்தது. அதில் 15 பேர் பயணம் செய்தனர். வேலூர் மாவட்டம் ஓச்சேரி, களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அங்கு பெங்களூருக்கு ஆப்பிள் பழங்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் பழுதாகி நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு சொகுசு பஸ் வேன் மீது மோதியது.
இதையடுத்து சிறிது நேரத்தில் பின்னால் வந்த கார் நிலை தடுமாறி விபத்தில் சிக்கிய இருந்த பஸ்சின் மீது மோதியது. இதில் பஸ்சும், காரும் தீப்பிடித்தது.
பஸ்சில் 15 பயணிகள் இருந்தனர். பஸ் தீபிடிக்க தொடங்கியதை கண்டு பதறிப்போன அவர்கள் உடமைகளுடன் வேகமாக கீழே இறங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். சில நிமிடங்களில் பஸ்சும், காரும் கொழுந்துவிட்டு தீபற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சிலர் தீயை அணைக்க முயன்றனர். பயணிகள் சிலர் பஸ்சை விட்டு 100 மீட்டர் தூரம் வரை ஓடிசென்று நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் பஸ் பெரும் பகுதி எரிந்து நாசமானது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் டிரைவர் வந்தவாசி விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த சரவணன் படுகாயமடைந்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
Average Rating