சிறிய குடும்பம்; பெண் குழந்தையே வேணாம்!* இந்திய வட மாநில “ட்ரெண்ட்” இது
“சிறிய குடும்பம் போதும் பெண் குழந்தையே வேண்டாம்” இது தான், இந்திய வட மாநிலங்களில் பலவற்றில் இப்போது மக்களிடம் உள்ள மனப்போக்கு. கனடாவை சேர்ந்த ஆராய்ச்சி மையத்தின் நிதி உதவியுடன், டில்லியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் சர்வே நடத்தியது. சர்வேயில் தெரிந்த தகவல்கள்: சிறிய குடும்பம் போதும்; குழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், பெண் குழந்தை மட்டும் வேண்டாம். இது தான், பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேசம் போன்ற பல வட மாநில மக்களின் மனப்போக்காக உள்ளது. மகன்கள் வேண்டும்; அதுவும் இரண்டுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், பெண் குழந்தை தேவை இல்லை. அதை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதில், இளம் தம்பதியினர் உஷாராக உள்ளனர். “ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், பெண் குழந்தை மட்டும் பிறந்துவிடக் கூடாது” என்பதில் 52 சதவீதம் பேர் முன்னெச்சரிக்கையாக உள்ளனர். இதற்கு ஜாதிப்பின்னணி தான் காரணம். குறிப்பிட்ட சில ஜாதிகளை சேர்ந்த குடும்பத்தினர் தான், பெண் குழந்தைகளை இன்னமும் தவிர்க்கின்றனர். இவர்களில் லட்சாதிபதிகளும் கணிசமாக உள்ளனர். “சொத்து போய்விடக்கூடாது, தொழில் கைமாறக்கூடாது” என்று நினைத்து, பெண் குழந்தை பிறப்பதை தவிர்த்து விடுகின்றனர். இப்படிப்பட்ட போக்கு, பஞ்சாப், அரியானா தொழில், வர்த்தக அதிபர்களிடம் காணப்படுகிறது.
பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேசம் உட்பட சில வட மாநிலங்களில், பெண்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்து வருவதற்கு, ஜாதிப்பின்னணி, தொழில், சொத்து பிரச்னை தான் காரணம். போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள், பெண் குழந்தைகளை வெறுக்கின்றனர்.
சில கோடீஸ்வரர்கள், தங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நவீன தொழில்நுட்ப முறைகளையும் கையாள்கின்றனர். வெளிநாடுகளில் பின்பற்றப்படும் பாலின மாற்றும் சிகிச்சை முறைகளும் இப்போது, இந்த மாநிலங்களில் காணப்படுகிறது. அப்படி மாற்றினால் சொத்து தன் கைக்கு வரும் என்ற தவறான நம்பிக்கை பின்பற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சர்வேயில் தெரிய வந்துள்ளது.