பு.புளியம்பட்டி அருகே நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உள்பட 3 பேர் பலி…!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கோணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48) வெல்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி முத்துலட்சுமி (38).
இந்த நிலையில் முருகன், உடுமலைபேட்டை அருகே உள்ள சங்காம்பாளையம் கருப்பணராயன் வீரமாத்தி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்ய காரில் புறப்பட்டார்.
காரில் முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி, மற்றும் மகள் ரேவதி (24) மருமகன் சாஜன் (27), இவர்களது 10 மாத பெண் குழந்தை தட்சிவி மற்றும் முருகனின் மற்றொரு மகள் அஸ்விதா மற்றும் உறவினர் மணி (17) ஆகியோர் சென்றனர். காரை மருமகன் சாஜன் ஓட்டினார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் கார், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ரோட்டில் நின்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி முருகன், முத்துலட்சுமி மற்றும் 10 மாத குழந்தை தட்சிவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் விபத்தில் ரேவதி, சாஜன், அஸ்விதா, மணி ஆகியேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான முருகன், முத்துலட்சுமி மற்றும் குழந்தை தட்சிவி உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி புஞ்சை புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating