படை வீரர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம் பாதுகாப்பு அமைச்சு, மத்திய வங்கி நிதி சேகரிப்பு
படை வீரர்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து முன்னெடுத்துள்ளன. இந்த வீடுகள் நிர்மாணம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில், நடப்பிலுள்ள சந்தை நிலவரங்களை விட குறைந்த செலவில் ஒரு வருடத்தில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது எமது இலக்காகும். இதற்கமைய குறிப்பிட்ட படைவீரர்களுக்கான கடன் திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வில்லி கமகே இத்திட்டத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் 50 ஆயிரம் வீடுகளுக்கென 15 பில்லியன் ரூபா நிதியை அன்பளிப்பாக மக்களிடமிருந்த திரட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வீட்டுத் திட்டத்திற்கான பொதுமக்களின் நன்கொடையாக வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களிடமிருந்து, 200 மில்லியன் ரூபாவை முதற்கட்டமாக அன்பளிப்பாக பெற்றுள்ளோம். 50 ஆயிரம் வீடுகளை பாதுகாப்பு அமைச்சு இலக்காக கொண்டிருக்கின்ற போதும், சேவையிலுள்ள படைவீரர்களுக்கென 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தேவையாக உள்ளன. இராணுவம், கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பிரிவில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றியவர்கள் தமது அடிப்படை வசதிக்கான இந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். பொதுமக்களிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கும் இந்த உதவிகள் படையணியில் நாட்டமுடன் செயற்படும் படைவீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். படைவீரர்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கும் இத்திட்டத்திற்கு தமது அன்பளிப்புக்களை வழங்க விரும்பும் பொதுமக்கள், காசோலையாகவோ, பணமாகவோ, நாட்டிலுள்ள எந்த இலங்கை வங்கிக் கிளைகளிலும் `அப்பி வெலுவன் அப்பி’ எனும் பெயரில் அன்பளிப்பை அனுப்பி வைக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.