வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
கொழும்பு, பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள்ளிருந்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அவ்வீட்டு உரிமையாளரென்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அவர் சுமார் 45 வயது மதிக்கத் தக்கவர் என்று வெள்ளவத்தைப் பொலிஸார் கூறினர். குறித்த நபர் உயிரிழக்கும் போது போதையில் இருந்திருப்பதாகவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இறந்து கிடந்த அறையில் மது நிரப்பப்பட்ட கிளாஸொன்றும் அதனருகில் மதுபானப் போத்தலொன்றும் இருந்ததாகவும் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். இதேநேரம், இது திடீர் மரணம் என்றே முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர். இறந்துகிடந்தவரின் அருகில் விளையாட்டுத் துப்பாக்கியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.