போலி நாணயத்தாள்களின் பாவனை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், பெருமளவிலான போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயத்தாள்களை இனங்காண்பதற்கான பிரிவின் பொறுப்பதிகாரி இச் சட்டவிரோத பணம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில்; 1000 ரூபா, 2000 ரூபா மற்றும் 500 ரூபா உள்ளூர் நாணயத் தாள்களுடன், யூரோ மற்றும் அமெரிக்க டொலர்களும் புழக்கத்துக்கு வந்திருப்பது இனங்காணப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்களை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகளை கட்டியுள்ள நிலையில் நீர்கொழும்பு மாத்தறை போன்ற இடங்களில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறான போலி நாணயத்தாள்களின் பணம் கொடுக்கல் வாங்கல்கள் நடவடிக்கைகள் இனங்காணப்பட்டால் 0112320141, 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கோ அல்லது அவசர அழைப்புக்கான 119, 118 ஆகிய இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.