சங்கரன்கோவிலில் நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்து தாய்– மகன் பலி…!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 5–வது தெருவை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 31). இவர் சங்கரன்கோவில் பஜாரில் கண்ணாடி கடை நடத்தி வந்தார். திருமணம் ஆகாத முத்துமாரி தனது தாய் லட்சுமி (55), தம்பி ஆறுமுகம் (29) ஆகியோருடன் வசித்து வந்தார்.
முத்துமாரியின் வீட்டின் மேற்கூரை மரக்கட்டைகள் வேயப்பட்டு அதன் மீது தள ஓடுகள் போடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இரவில் முத்துமாரி, அவரது தாய் லட்சுமி ஆகிய இருவரும் வீட்டு உள் அறையிலும், தம்பி ஆறுமுகம் வெளி அறையிலும் படுத்திருந்தனர்.
வீட்டு மாடியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிண்டக்ஸ் டேங்க் இருந்தது. நேற்று இரவு அந்த டேங்கில் தண்ணீர் நிரப்பி உள்ளனர். அப்போது டேங்க் நிரம்பி அதிகப்படியான தண்ணீர் மாடியில் தேங்கி உள்ளது. இதை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
மரக்கட்டை வேயப்பட்ட பழைய வீடு என்பதால் மேற்கூரை முழுவதும் தண்ணீரில் நனைந்தது. அதே நேரத்தில் டேங்க் முழுவதும் தண்ணீர் நிரம்பி அதிக பாரம் இருந்ததால் நள்ளிரவு 1 மணியளவில் தண்ணீர் டேங்கின் பாரம் தாங்காமல் வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
அந்த இடிபாடுகள் வீட்டின் உள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் லட்சுமி மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். முன் அறையில் படுத்திருந்த ஆறுமுகம் காயம் இன்றி உயிர் தப்பினார்.
வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து ஓடிவந்தனர். சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த முத்துமாரி, லட்சுமி ஆகிய இருவரின் உடலையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு இடிந்து தாய்–மகன் பலியான சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating