பனப்பாக்கம் அருகே கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை…!!
பனப்பாக்கத்தை அடுத்த நெமிலி பழைய கண்டிகை காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் மணி (52). அவர்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில், மணி தனது வீட்டின் முன்பு தெருவில் வேகத்தடை அமைத்தார்.
அந்த வேகத்தடை, வழக்கத்தை விட சற்று உயரம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பத்தின் மகன் தனசேகரன் (25) மோட்டார்சைக்கிளில் சென்றபோது, அந்த வேகத்தடையில் எதிர்பாராதவிதமாக தடுக்கி விழுந்து விட்டார்.
அதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன், ‘‘யார் இங்கு இவ்வளவு உயரமாக வேகத்தடை அமைத்தது?’’ என்று கேட்டதுடன், அதை இடித்து அகற்றுவதற்காக, தனது வீட்டில் இருந்து கடப்பாரையை எடுத்து வந்தார். தனசேகரன் கடப்பாரையுடன் வருவதைக்கண்டு அஞ்சிய மணி, அவரை சமாளிப்பதற்காக கத்தியுடன் தயாராக இருந்தார். வேகத்தடை அமைத்தது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது.
தனசேகரனுக்கு ஆதரவாக அவரது தந்தை சம்பத், தாய் தேன்மொழி (48), சித்தப்பா கிருஷ்ணன் (49) ஆகியோரும், மணிக்கு ஆதரவாக அவரது மனைவி யசோதா (45), மகன்கள் அருண்குமார் (28), ஆனந்த் (23) ஆகியோரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
இந்த கோஷ்டி மோதலின்போது மணி, கத்தியால் தனசேகரனை குத்தியுள்ளனர். மற்றும் தேன்மொழி, கிருஷ்ணன், மணி, அருண்குமார், ஆனந்த் ஆகியோரும் தாக்குதலில் காயம் அடைந்தனர்.
கத்திக்குத்து பட்டதில் குடல் சரிந்து பலத்த காயம் அடைந்த தனசேகரன், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, தனசேகரன் பரிதாபமாக இறந்தார். அவர், காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கோஷ்டி மோதலில் காயம் அடைந்த மற்ற 5 பேரும் சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating