சங்கரன்கோவில் அருகே தமிழக முன்னாள் அமைச்சரின் பேரன் கிணற்றில் விழுந்து பலி…!!
சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மகள் ஆவார். இவர்களது மகன் காட்டுராஜா (வயது 10). இவர் சரியாக வாய் பேச முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த காட்டுராஜா மாலை நேரத்தில் குளிப்பதற்காக அருகில் உள்ள மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய காட்டுராஜா மூச்சு திணறி பலியானார்.
வெகுநேரமாகியும் காட்டுராஜா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை பல இடங்களிலும் தேடினர். பின்னர் அவர்கள் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையில் காட்டுராஜா கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating