15 வயது மாணவியை கற்பழித்துவிட்டு தலைமறைவாக இருக்கும் எம்.எல்.ஏ.வின் சொத்துகள் முடக்கம்…!!
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். மாநிலத்தை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த ஆறாம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ராஜ்பல்லா யாதவை கைது செய்ய பீகார் மாநில போலீஸ் டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்துள்ளார். .
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த ஹில்சா நகர போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 15 நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜ்பல்லா யாதவின் சொத்துகளை ஜப்தி செய்யும்படி நேற்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது சொந்த ஊரான நவாடா மாவட்டத்தில் உள்ள பத்ரா இங்கிலீஷ் கிராமத்துக்கு இன்று கோர்ட் அலுவலருடன் சுமார் 150 போலீசார் வந்தனர்.
எம்.எல்.ஏ., ராஜ்பல்லா யாதவின் வீடு மற்றும் தோட்டம், வயல்களை ஜப்தி செய்வதற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating