தற்போதைய பெண்கள் விரும்பும் சுதந்திரம்…!!
ஆண்களுக்கு சமமாக பெண்களும் கல்வியில் முதன்மை வகிக்கிறார்கள். பெண்கள் தாங்கள் விரும்பியதை செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதிலும் இன்றைய இளம் பெண்கள் பல்வேறு விருப்பங்களை கொண்டுள்ளனர். அவை என்னவென்று பார்க்கலாம்.
* கல்லூரி முடித்து வெளியூர் வேலைக்கு செல்வது என்பது பெண்களுக்கு இப்போது அதிகரித்து வரும் ஆசையாக இருக்கிறது. பெண்களுக்கு வெளியூர் செல்வது, வெளியூரில் வேலை என்பது சிலருக்கு மட்டுமே வரமாக அமைகிறது. பலருக்கு அது பயம் கலந்த விஷயமாக தான் இருந்து வருகிறது. வெளியூர் வேலைசெய்தால் சுதந்திர உணர்வோடு இருக்க முடியும் என்பது தற்கால பெண்களின் எண்ணமாக உள்ளது.
* நவீன யூகத்தில் பெண்கள் தனிமையை அதிகம் விரும்புவர்களாக உள்ளனர். அவர்கள் சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட கூடாது என்று நினைக்கிறார்கள். அது பெற்றோராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி. புதியதாய் சிறகு முளைத்த பறவையை போல வேலை கிடைத்தவுடன் வானில் பறக்க விரும்பும் இவர்கள், தனிமையையும் விரும்ப துவங்குவது இந்த 20 வயதில் தான்.
* உண்மையில் ஆண்களுக்கு இருக்கும் அளவிற்கு குடும்ப பொறுப்புகள், வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நிலைமை பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. ஆகவே, சுயமாக சம்பாதிக்கும் பணத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
* அப்பா, அண்ணன் போன்றோரின் உதவி இன்றி தானாக முன்னேறி சமூதாயத்தில் காலூன்ற வேண்டும் என்ற வலிமையான கனவு இக்காலத்து பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
* சமூகத்தில் லிவ்-இன் உறவுகளில் இருப்பவர்கள் 10% கூட இல்லை. ஆனால், இதன் பிம்பம் என்னவோ வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் லிவ்-இன் உறவில் இருப்பது போல பரவி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் அளவுக்கு நம் நாட்டு பெண்கள் அவ்வளவு மோசமாகிடவில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
* வேலைக்கு செல்ல அனுமதிக்கும் ஆண்களையே திருமணம் செய்து கொள்ள இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். தங்களுடைய தேவையை தங்களால் நிறைவேற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்றைய பெண்களிடம் அதிகம் உள்ளது.
Average Rating