தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கனடாசெல்ல விஸா இல்லை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையிலிருந்து கனடா செல்வதைத் தடுப்பதற்கு கனேடியத் தூதரகம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படும் எவருக்கும் விஸா அனுமதி வழங்க வேண்டாமென கனேடியத் தூதரகம் அதிகாரிகளுக்கு உத்தியோகப்பற்றற்ற அறிவித்தல் வழங்கியிருப்பதாக தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனடா செல்வதற்கு விண்ணப்பித்திருந்த யாழ்ப்பாணத்தில் கல்விபயின்ற ஒருவரின் விஸா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற காரணத்துக்காகவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலேசியா சென்று அங்கிருக்கும் கனேடியத் தூதரகத்தின் ஊடாக கனடாவுக்கான விஸா பெற்றுச் சென்றதாகத் தெரியவருகிறது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து கனேடிய விஸா பெற்றுச் சென்றுள்ளார். இலங்கையிலுள்ள கனேடியத் தூதரகத்தின் விஸா அனுமதிக் கட்டுப்பாடு தொடர்பாக அறிந்து கொண்டிராத மலேசியாவிலுள்ள கனேடியத் தூதரகம் அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு விஸா வழங்கியிருந்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தடைசெய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் சேர்த்திருப்பதாக அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.