இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்
ஜனவரி 12-ந் தேதி இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இ.மெயிலில் மிரட்டல் டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மாநிலம் குர்கோன் உத்யோக் விகாரில் ஏர் இந்தியா கால்சென்டர் உள்ளது. அங்கு ஒரு திடுக்கிடும் இ.மெயில் வந்தது. ஜனவரி 12-ந் தேதி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. பெயர் குறிப்பிடாமல் யாரோ மர்ம மனிதர்கள், இந்த இ.மெயிலை அனுப்பி இருந்தனர். இதுபற்றி ஏர் இந்தியா உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகரிப்பு உடனே, ஏர் இந்தியா உதவி மேலாளர் ஹரீஷ் மசந்த், உத்யோக் விகார் போலீஸ் நிலையத்தில் இந்த இ.மெயில் குறித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த இ.மெயில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க, சைபர் கிரைம் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையை அமைத்துள்ளனர். இந்த இ.மெயில் மிரட்டலை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி விமான நிலையம் உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணிகளிடம் சோதனை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடமும், பார்வையாளர்களிடமும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. மேலும், அவர்கள் கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெறும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு இ.மெயில் மூலம் மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து இந்த இ.மெயில் மிரட்டல் வந்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.