நடிகை சரிதா விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தையில் இழுபறி பிப்ரவரி 18-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில், நடிகை சரிதா மற்றும் அவரது கணவரும், நடிகருமான முகேஷ் ஆகியோர் நேற்று குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. விவாகரத்து வழக்கு தப்பு தாளங்கள்’ படத்தில் அறிமுகமாகி `அச்சமில்லை’, `நெற்றிக்கண்’, `ஜுலி கணபதி’ உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சரிதா. இதுமட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகரான முகேசை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 17 வயதிலும், 14 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மகன்களும் சரிதா பராமரிப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா, சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சமரச பேச்சு
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் முதல் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி தேவதாஸ் இருவரையும் அழைத்து அறிவுரை வழங்கினார். பின்னர், குடும்பநல கோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. சரிதாவின் இரு மகன்களும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி தங்கள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.
இரு மகன்களின் நலன் கருதி, முகேசின் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. முகேசுக்கு சென்னையில் மட்டுமல்லாது, எர்ணாகுளத்திலும் சொத்துக்கள் உள்ளன.
பேச்சில் இழுபறி
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குடும்பநல கோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடிகை சரிதா, தனது வக்கீல் ரீட்டா சந்திரசேகரனுடன் வந்து ஆஜரானார். சரிதா கோர்ட்டின் முன்புற வாசல் வழியாக சமரச தீர்வு மையத்திற்கு வந்தார். அதே சமயம் கோர்ட்டின் பின்புற வாசலில் காரில் இருந்த முகேஷ், தனது வக்கீல் பிரகாசுடன் சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்.
சமரச தீர்வாளர் உமா ராமநாதன், இவர்களிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். பேச்சுவார்த்தையில் நேற்று தீர்வு ஏற்படவில்லை. இழுபறி நிலையே நீடித்தது. எனவே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக வரும் பிப்ரவரி மாதம் 18-ந் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டுமென்று, சமரச தீர்வு மையம் உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு பிறகு சரிதாவும், முகேசும் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு வழியாக தங்கள் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.