கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு!!
எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண், 2006ம் ஆண்டு, எந்த தொடர்பும் இல்லாத ஒருவருடன் காரில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஏழு பேர், இருவரையும் தாக்கியதோடு, அந்த பெண்ணை கற்பழித்து விட்டனர். சவுதி அரேபியா சட்டப்படி, திருமணமாகாத பெண், வேறு ஒருவரை தனிமையில் சந்திப்பது தவறு. அந்த பெண்ணுக்கும், காரில் இருந்தவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தனக்கு திருமணமாகப் போவதால், தன்னுடைய புகைப்படத்தை திரும்ப வாங்குவதற்காக, அவரை சந்தித்தாக அந்த பெண் கூறினார். இது தொடர்பான வழக்கில், அந்த பெண்ணுக்கு 90 கசையடியும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. உடனிருந்தவர், கற்பழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீல் வழக்கில் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனை இரு மடங்காகவும், மற்றவர்களுக்கு இரண்டு ஆண்டு முதல் ஒன்பது ஆண்டு சிறை தண்டனையாகவும் அதிகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனை அளிப்பது குறித்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்க அதிபர் புஷ்சும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு வழங்கியதாக, அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் அப்துல்லா பின் முகமது அல் ஷேக் தெரிவித்தார். “மன்னர் மன்னிப்பு வழங்கியது, நீதிபதியின் தீர்ப்பு தவறு என்று அர்த்தம் அல்ல. நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டுவதால், தனது பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு அளித்துள்ளார்’ என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.