சீனாவில் நிதி மோசடி வழக்கில் 24 பேருக்கு சிறை தண்டனை…!!
சீனாவில் தனியார் நிதி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் அதிக முதலீடுகளை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை தொடங்கினர்.
அப்போது பல்வேறு நிதி நிறுவனங்கள் இணையம் மூலமாகவும் நேரடியாகவும் போலியான அறிவிப்புகள் மூலம் அதிக முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
குவாங்டங் மாகாணத்துக்கு உட்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 47 சதவீதம் கூடுதலாக திருப்பி தருவோம் என்ற போலி வாக்குறுதி மூலம் நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது. அதில் அதிகமானோர் மூத்த குடிமக்கள் ஆவர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த நிறுவனத்தை சேர்ந்த 24 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த குவாங்சூ இடைநிலை மக்கள் கோர்ட்டு மோசாடியின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜியாங்ஹாங்வேய் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
மற்ற 23 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களது சொத்துகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Average Rating