சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை…!!
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் – விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இதுவரை உரிய பலன் கிடைக்கவில்லை.
சிறுத்தை, காட்டு யானை ஆகியவை அவ்வப்போது மனித உயிர்களுக்கு உலை வைக்கின்றன. தோட்டங்களுக்குள் வன விலங்குகள் புகாமல் இருக்க மின் கம்பிவேலி அமைத்துள்ளனர்.
மின் கம்பி வேலி அமைத்தும் வன விலங்குகளின் அட்டூழியம் அடங்காததால் சிலர் ஆங்காங்கே சுருக்கு கம்பி அமைத்துள்ளனர். அவற்றில் சிக்கும் சிறுத்தை மற்றும் வன விலங்குகள் உயிரிழக்கின்றன.
இந்த நிலையில் நீலகிரி தெற்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட லவ்டேல் பகுதியில் வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை சிலர் பார்த்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கால்நடை டாக்டர் விஜயராகவனுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
மயக்கம் ஏற்பட்டதும் சுருக்கு கம்பியை வெட்டி சிறுத்தையை மீட்டனர். சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை அதிலிருந்து தப்ப போராடியிருக்கிறது. எனவே மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காயம் குணமானதும் அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும். சுருக்கு கம்பி வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அதிகாரி பத்ரசாமி கூறினார்.
Average Rating