ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது மனிதகுண்டு தாக்குதல்- 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்…!!
ஆப்கானிஸ்தானின் கிழக்கேயுள்ள நாங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த தற்கொலைப்படை தீவிரவாதி திடீர் தாக்குதல் நடத்தினான்.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எட்டு கார்கள் வெடித்து சிதறின. அதே பகுதியில் மறைந்திருந்த மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது, இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் காபூல் நகரிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது இரண்டு முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீராட் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகியது. இதில் 9 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating