கல்லூரி மாணவி தற்கொலை
விரும்பிய படிப்பில் சேர முடியாததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் திருப்பானாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கூட்டேரிப் பட்டில் உள்ள வங்கி கிளை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தவர் மகேஸ்வரி (வயது18). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகேஸ்வரியின் தோழிகள் சிலர் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார்கள். ஆனால், மகேஸ்வரிக்கு அந்த படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் விரக்தி அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. விடுமுறைக்காக சிலநாட்களுக்கு முன்னர் மகேஸ்வரி சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்திருந்தார். இந்நிலை யில், புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 16ந் தேதி மகேஸ்வரியின் பெற்றோர் சென்று 17ந் தேதி வீட்டிற்கு திரும்பினர். வீட்டின் கதவை பலமுறை தட்டியும், குரல் எழுப்பியும் கதவுதிறக்கப்பட வில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு மகேஸ்வரி பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அப்போது மகேஸ்வரி கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், இந்த உலகில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது சாவிற்கு எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.