சென்னைக்கு வந்த ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 4 மாத ஆண் குழந்தை: போலீசார் விசாரணை…!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு ‘ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்’ (வ.எண். 16126) ரெயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரெயிலின் ‘எஸ்-9’ படுக்கை வசதிக்கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பச்சிளம் குழந்தை கேட்பாரற்று கிடப்பதாக ரெயில்வே ஹெல்ப்லைன் எண் ‘1512’-க்கு தகவல் வந்தது.
இதையடுத்து எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகைக்காக ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்றதும், ‘எஸ்-9’ பெட்டியில் இருக்கையில் படுக்கவைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தையை மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை பிறந்து 4 மாதங்களே இருக்கும். இதையடுத்து ஜோத்பூர் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் யாராவது குழந்தையை தவறவிட்டுள்ளனரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தகவல் எதுவும் கிடைக்காததை அடுத்து அந்த குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரெயிலில் மீட்கப்பட்ட 4 மாத ஆண் குழந்தையை விட்டுச்சென்றது யார்?, குழந்தையின் பெற்றோர் யார்? யாராவது கடத்தி கொண்டுவந்தார்களா?, கடத்தி கொண்டுவரும்போது போலீசுக்கு பயந்து விட்டுச்சென்றார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் வழித்தடங்களில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களில் கைக்குழந்தையோடு யாராவது ஏறினார்களா? என்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட குழந்தை யின் புகைப்படத்தை முக்கிய ரெயில் நிலையங்களுக்கு போலீசார் அனுப்பிவைக்க உள்ளனர். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating