அங்கோலாவில் மார்க்கெட்டுக்குள் புகுந்த வெள்ளம்: 23 பேர் பலி..!!
அங்கோலாவில் பெய்து வரும் கனமழையால் மார்க்கெட்டுக்குள் திடீரென வெள்ளம் புகுந்ததால் 23 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகினர்.
தெற்குப்பகுதியில் உள்ள முக்கிய நகரமான லுபாங்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கேபிடாவ் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று வெள்ளம் மேலும் அதிகரித்த நிலையில், ஆற்றின் கரையைத் தாண்டி மார்க்கெட்டுக்குள் புகுந்தது.
இதில் குழந்தைகள் உள்பட 23 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானதாகவும், சுமார் 30 பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும் அங்கோப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏராளமான இளைஞர்கள் தங்கள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கழுவி சுத்தம் செய்வதற்காக திரண்டிருந்தபோது வெள்ளம் வந்ததால் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Average Rating