இஸ்ரேல் தாக்குதலில் 4 ஐ.நா. பார்வையாளர்கள் பலி- இந்திய முகாமும் தரைமட்டம்!
இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஐ.நா. சபையைச் சேர்ந்த நான்கு பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் வருத்தம் தெரிவித்துள்ளன. இருப்பினும் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக லெபனான் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இத் தாக்குதலில் இதுவரை 700 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனானை முற்றிலும் நிõசப்படுத்தி விட்டது இஸ்ரேல். இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினரும் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் 1000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் படைகளைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் இஸ்ரேல்தெற்கு லெபனான் எல்லையில் உள்ள கியாம் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. முகாம் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் நான்கு பார்வையாளர்கள் பலியாயினர். அந்தக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்தது. அந்த முகாமில் ஆஸ்திரேலியா, சீனா, கனடா, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐ.நா. பார்வையாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய படையினர் அமைத்திருந்த பதுங்கு குழிகளும், முகாமும் தரைமட்டமானது.
மொத்தம் 14 குண்டுகள் இந்த இடத்தில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் காயம்டைந்தனர். இவர்களில் திலீப்குமார் மன்னா என்பவர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார்.
இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் நான்கு ஐ.நா. பார்வையாளர்கள் இறந்தது குறித்து இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது. இது எதிர்பாராதது. இருப்பினும் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்காவும் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று இஸ்ரேல் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 13 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.