மூன்று மாதங்களுக்குள் கிளிநொச்சியை கைப்பற்றி பிரபாகரனை அழிப்போம்
இன்னும் மூன்று மாத காலத்தினுள் கிளிநொச்சியை கைப்பற்றி அங்கு பதுங்கியிருக்கும் பிரபாகரனை அழித்து விடுவோமென ஜனாதிபதியின் சகோதரரும் துறைமுகங்கள் அபிவிருத்தி, விமானத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார். தென்னிலங்கை அபிவிருத்தி அதிகாரசபை 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணித்த அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே பிரபாகரனுடன் மோதமுடியம். கோதாபய ராஜபக்ஷ மகிந்த ராஜபக்ஷவுக்கு வலுவூட்டி வருகின்றார். எமது படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிட்டன. இன்னும் மூன்று மாதங்களுக்குள் கிளிநொச்சியை முற்றாக கைப்பற்றி அங்கு பதுங்கியிருக்கும் பிரபாகரனை அழித்து விடுவோம். நாங்கள் பதுங்கு குழிகளை அமைக்க புலிகளுக்கு சீமெந்துகளை அனுப்பவில்லை. பணம் கொடுக்க வில்லை. அவர்களை அழிப்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். நாங்கள் யுத்தம் புரிவது நாட்டை அழிப்பதற்கல்ல. யுத்தம் முடிவடைந்த பின்பே அமைதிக்கு அடிக்கல் நட முடியும். அதன் பின் சமாதானம் ஏற்படும். கடந்த 30 வருடங்களாக பலர் யுத்தம் புரிந்து எந்தப் பலனையும் காணவில்லை. ஆனால், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்துவரும் யுத்தத்தில் வெற்றி கிடைப்பது நிச்சயம். இந்த மகிந்த சிந்தனையை ஆழமாக தெரிந்த பின்னரே கருஜயசூரிய போன்ற அரசியல்வாதிகள் ஐ.தே.க.விலிருந்து விலகி எம்முடன் இணைந்துள்ளனர். சில பிற்போக்குவாதிகளுக்கு நாட்டின் அதிகாரம் தேவைப்படுகின்றது. அதற்காக அவர்கள் எந்தச் செயலையும் செய்வதற்கு தயாராயிருக்கின்றனர்.