ஏமனில் முதியோர் பாதுகாப்பு மையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 4 இந்திய நர்ஸ்கள் உள்பட 16 பேர் பலி…!!
ஏமனில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையத்தில் துப்பாக்கி தாங்கிய தீவிரவாதிகள் கண்மூடி தாக்குதல் நடத்திய கோர சம்பவத்தில் நான்கு இந்திய நர்ஸ்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டின் முக்கிய நகரான ஏடனின் தெற்குப் பகுதியில் ஷேக் ஆத்மன் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் முதியோர் பாதுகாப்பு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை இன்று நான்கு தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் சுற்றி வளைத்தனர். அத்துடன் முதியோர் தங்கியிருக்கும் மையம் என்று கூட பார்க்காமல் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நான்கு பேர் இந்திய நர்ஸ்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடந்தபோது முதியோர்கள் குடும்ப உறவினர்கள் பலர் மையத்தில் இருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். தீவிரவாதிகள் அல்லது ஐ.எஸ். குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும் இதுவரை எந்த அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே, ஏமனில் அரசுக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அரசுக்கு எதிரான சவுதி படை தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை இதே மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர். கடந்த மாதம் 17-ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating