ஆம்பூர் அருகே கார்–லாரி மோதல்: டாக்டர்–மனைவி உள்பட 3 பேர் பலி…!!
சென்னை செனாய்நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 66). டாக்டர். இவர் தனது மனைவி லட்சுமி (55) மற்றும் குடும்பத்தினருடன் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் குமாரசாமி, லட்சுமி உள்பட 6 பேர் இருந்தனர்.
இன்று மதியம் அந்த கார் ஆம்பூரை அடுத்த தோட்டாளம் பகுதியில் 6 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள மேம்பாலம் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சென்டர் மீடியனில் மோதியது.
மோதிய வேகத்தில் கார் மறு மார்க்கத்து சாலைக்கு சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் சென்னையில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் இருந்த குமாரசாமி, லட்சுமி உள்பட 3 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இறந்து போனவர்களில் மற்றொருவரின் பெயர் தெரியவில்லை.
காரில் இருந்த மற்ற 3 பேரும் காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து அந்த பகுதியில் இன்று மதியம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating