கோழி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது…!!
நாகர்கோவில் கீழ தட்டான்விளை விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கணேசபுரத்தில் கோழி கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் செட்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழி மறித்து தடுத்து நிறுத்தியது. திடீரென கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் ரமேஷ் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் செல்போன் ஒன்றை பறித்து விட்டு தப்பியோடி விட்டது.
இது குறித்து ரமேஷ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசாரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கோட்டார் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 22), அனந்தநாடார் குடியைச் சேர்ந்த ஜெயராமன் (23), கோட்டரைச் சேர்ந்த சுரேஷ் கோபி (23) ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தனர்.
போலீசார் அவர்களை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது ரமேசிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து மனோஜ், ஜெயராமன், சுரேஷ்கோபி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராமன் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். சுரேஷ்கோபி, நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. 2–ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Average Rating