கடையாலுமூடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: பிளஸ்–2 மாணவர் பலி…!!
கடையாலுமூடு அருகே களியல் பிலாந்தோட்ட விளையை சேர்ந்தவர் ஜோசப் அகஸ்டின். கூலி தொழிலாளி.
இவரது மகன் லிபின் ஜாண் ஜோசப் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினார்.
அடுத்த தேர்வுக்காக அவர் தயாராகிக் கொண்டு இருந்தார். இன்று அதிகாலை அவரும், அவருடன் படிக்கும் குழிக்கால் விளையைச் சேர்ந்த ஜெர்பின் என்ற மாணவரும் மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு புறப்பட்டுச் சென்றனர். மோட்டார் சைக்கிளை லிபின்ஜாண் ஜோசப் ஓட்டினார். நெட்டா–களியல் சாலையில் கட்டச்சல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சுற்றுலா பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லிபின்ஜாண் ஜோசப், ஜெர்பின் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். லிபின்ஜாண் ஜோசப் பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கினார். தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெர்பினை பொதுமக்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கடையாலுமூடு சப்–இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த லிபின் ஜாண் ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லிபின் ஜாண் ஜோசப் பலியானது குறித்து தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் கதறியபடி அங்கு விரைந்து வந்தனர். தனது மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சுற்றுலா பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிளஸ்–2 மாணவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர் பலியானது பற்றி தகவல் அறிந்ததும் சக மாணவர்களும், ஆசிரியர்கள் ஏராளமானோர் கண்கலங்கினார்கள். * * * மாணவர் லிபின்ஜாண் ஜோசப் பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.
Average Rating