தேனி அருகே 10–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!
தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஏழ்மையில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு உரிய வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். சமூகநல ஆர்வலர்கள் இதுபோன்ற திருமணங்களை அவ்வப்போது தடுத்த போதிலும் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அப்பகுதியில் உள்ள ஒருபள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் குரும்பபட்டியை சேர்ந்த சுருளி(வயது25) என்ற வாலிபருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 11–ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதனை கேள்விபட்ட தேனி குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் விஜயலெட்சுமி தலைமையில் களப்பணியாளர்கள் அங்கு சென்றனர். மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் படிக்கும் வயதில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. 18 வயது பூர்த்தியடைந்தபின்னரே திருமண ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று அறிவுரை கூறி அந்த மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் அதனை உறுதி செய்யும் விதமாக பெற்றோரிடம் எழுதி வாங்கப்பட்டது.
Average Rating