படம் பிடிக்க முயன்றவரை கடித்துக் கொன்ற புலிகள் அசாம் மிருக காட்சி சாலையில் பயங்கரம்
அசாம் மாநிலம் சிப்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பெஷ்பருவா (வயது 50). இவர், தனது மனைவி, 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் கவுகாத்தியில் உள்ள மிருக காட்சி சாலைக்கு சுற்றுலா சென்றார். மிருக காட்சி சாலையை அவர்கள் உற்சாகமாக சுற்றி வேடிக்கை பார்த்து வந்தனர். அப்போது ஒரு இரும்புக் கூண்டுக்குள் இருந்த இரண்டு புலிகளை பெஷ்பருவா பார்த்தார். ஆர்வ மிகுதியால் நெருங்கிச் சென்று அவற்றைப் புகைப்படமும் எடுக்க முயன்றார். இதற்காக அவர் கூண்டுக்குள் கையை விட்டார். அங்கிருந்த வனவிலங்கு பாதுகாவலர்கள் அவரை எச்சரிக்கை செய்தனர். அதையும் மீறி பெஷ்பருவா புலிகளை புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டார். அப்போது, ஒரு பெண் புலி அவர் மீது பாய்ந்து கையைக் கடித்துக் குதறியது. அடுத்த வினாடி கூண்டுக்குள் இருந்த ஆண் புலி அவரது தோள்பட்டை மீது பாய்ந்து கடிக்க ஆரம்பித்தது. பெஷ்பருவா `குய்யோ முறையோ’ என்று அலறினார். அவரது தோள்பட்டை இரண்டாக கிழிந்து விட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மிருக காட்சி சாலை ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே பெஷ்பருவா பரிதாபமாக இறந்து போனார்.