தாறுமாறாக காரை ஓட்டியதில் 3 பேர் இறந்த சம்பவம் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்தார் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவு
சென்னையில் தாறுமாறாக, காரை ஓட்டி 3 பேர் பலியான விபத்தில் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். 3 பேர் பரிதாப சாவு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சென்னை நிï ஆவடி ரோட்டில் தாறுமாறாக காரை ஓட்டியதில் 3 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த சம்பவத்தில் காரை ஓட்டியதாக டிரைவர் சந்திரகாந்த் ஷர்மா என்பவர் சென்னை எழும்பூர் 14-வது கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் விபத்துக்குள்ளான காரை ஓட்டியது டிரைவர் சந்திரகாந்த் ஷர்மா இல்லை என்றும், அவர் போலி குற்றவாளி என்றும் தெரியவந்தது. விபத்துக்கு உள்ளான கார் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழிலதிபர் ராஜ்குமாருக்கு சொந்தமானது என்றும், அவரது 16 வயது மகன் அக்ஷல்குமார் காரை ஓட்டியதாகவும் தெரியவந்தது. காரில் சென்ற அக்ஷல்குமாரின் நண்பர்கள் இருவரும் தெரிவித்த தகவல் அடிப்படையிலும், சம்பவத்தை நேரில் பார்த்த ராஜேந்திரன், குமார் ஆகியோர் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சிறுவன் அக்ஷல்குமார் தான் காரை ஓட்டினார் என்பதும் தெரியவந்தது. இதன் பேரில் போலீசார் அக்ஷல்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு தேட ஆரம்பித்தனர்.
முன்ஜாமீன் மனு
போலீசார் கைது செய்யாமல் இருக்க, அக்ஷல்குமார் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஐகோர்ட்டு விசாரித்தது. பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டு, ஜாமீன் பெறுவதற்கு சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர்கள் கோர்ட்டை அணுகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் அக்ஷல்குமார் நேற்று சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர்கள் கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாஜிஸ்திரேட்டு கீதாராணி வழக்கை விசாரித்தார். விசாரணை முடிவில் இருநபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அக்ஷல்குமாருக்கு நிபந்தனை விதித்தும், மாஜிஸ்திரேட்டு ஆணை பிறப்பித்தார்.
ஜாமீனில் விடுதலை
அக்ஷல்குமாருக்கு அவரது தந்தை ராஜ்குமாரும், சித்தப்பா திருப்பதி குமாரும், ஜாமீன் வழங்கினார்கள். இதன் பேரில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. போலீஸ் விசாரணைக்காக அவர் (வியாழக்கிழமை) சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் முன்னிலையில், ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.