துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 18 பேர் பலி…!!
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் 3,692 பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டு மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.
அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டபுறம்பாக நுழைந்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் துருக்கி வழியாக வந்துள்ளனர். கடல் பயணத்தின்போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்துகளில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்குள் குடியேறும் நோக்கத்தில் வந்த அகதிகள் படகு துருக்கி நாட்டில் உள்ள டிடிம் நகரின் அருகேயுள்ள ஏய்ஜியன் கடற்பகுதியில் இன்று கவிழ்ந்தது. இதுதொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த துருக்கி கடற்படையினர் இதுவரை 15 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 18 பிரேதங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சில பிரேதங்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating