ஜனாதிபதி அடுத்த மாதம் ஏறாவூர் விஜயம்..!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏப்ரல் முதலாம் திகதி ஏறாவூருக்கான விஜத்தை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக்கூடிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறித் தொழிற்சாலை என்பனவற்றைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ஏப்ரல் 1ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஏறாவூருக்கு வருகை தரவிருக்கின்றார்.
வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.
இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலை, கைத்தறித் தொழிற்சாலைகள் இரண்டு என்பவை ஏப்ரல் 01 ஆம் திகதி ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருக்கின்றன.இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 2000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 06 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதியின் விஜயம், தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating