இலங்கை நார்வே தூதரின் புதிய முயற்சி
முடங்கிக் கிடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே நாட்டு சிறப்புத் தூதர் ஜான் ஹேன்சன் பாயர் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசுத் தரப்பினருடனும், விடுதலைப் புலிகள் தரப்புடனும் இவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமானால், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள் செப்டம்பர் 1ம் தேதிக்குள் விலக வேண்டும் என்று புலிகள் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லாமல் உள்ளது. இப்படி இலங்கைப் பிரச்சினையில் நிலவி வரும் தேக்க நிலையை அகற்றும் பொருட்டு இன்னொரு புதிய முயற்சியில் நார்வே இறங்கியுள்ளது. இதன் அடிப்படையில், இந்த வார இறுதியில் நார்வே தூதர் பாயர் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து இலங்கை திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் கெகேலியா ரம்புக்வெல்லா கூறுகையில், பாயர் இந்த வார இறுதியில் கொழும்பு வருகிறார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் முதலில் அவர் பேச்சு நடத்துகிறார். செப்டம்பர் 1ம் தேதி கெடுவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தவுள்ளார்.
விடுதலைப் புலிகளை சமரசப்படுத்த கடந்த வாரம் ஸ்வீடன் நாட்டு தூதர் ஆண்ட்ரீஸ் ஒலிஜுவன்ட் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து பாயர் வருகிறார்.
புலிகள் தொடர்ந்து தங்களது நிலையில் உறுதியாக இருப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அமைதிக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளான ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று கூடி அரசுத் தரப்புடன் ஆலோசனை நடத்துகின்றனர் என்றார் ரம்புக்வெல்லா.
ஜே.வி.பி. கோரிக்கை:
இதற்கிடையே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை கலைத்து விடுவதே நல்லது என்று தமிழர் விரோத ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் சொமவன்சா அமரசிங்கே கூறுகையில், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே அந்தக் குழுவை கலைத்து விடுவது நல்லது. ஆனால் அப்படிச் செய்ய அரசுக்கு தைரியம் கிடையாது. அதுதான் பிரச்சினை.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு திறம்பட செயல்பட தவறி விட்டது. இந்தக் குழுவால் எந்தப் பயனும் இதுவரை ஏற்படவில்லை என்றார் அமரசிங்கே. ஆனால் இதை அமைச்சர் ரம்புகெல்லா மறுத்துள்ளார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதைக் கலைப்பது குறித்த முடிவை அதிபர்தான் எடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.