பாகிஸ்தானில் கடத்தப்பட்ட கவர்னரின் மகன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..!!
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட கவர்னரின் மகன் காணாமல் போய் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் டசீர், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி அவரது மகன் ஷாபாஸ் லாகூரின் குல்பர்க் பகுதியில் தனது அலுவலகத்தில் இருந்து கடத்தப்பட்டார். அவரைக் கண்டுபிடிக்க பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
ஷாபாஸ் காணாமல் போனதையடுத்து அவரை தீவிரவாத அமைப்புகள் கடத்திச் சென்றிருக்கலாம் என பல்வேறு யூக செய்திகள் வெளியாகின. சிறையில் அடைக்கப்பட்ட காத்ரியை விடுதலை செய்வதற்காக அவரை பிடித்து வைத்திருப்பதாகவும், 50 கோடி ரூபாய் கேட்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ஷாபாஸ் இன்று கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குவெட்டா நகரின் புறநகர்ப் பகுதியான குச்லக் பகுதியில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதை மூத்த போலீஸ் அதிகாரி ஐஜாஸ் கோராயா உறுதி செய்துள்ளார். விரைவில் லாகூர் கொண்டு வரப்படுவார் என்றும் அவர் கூறினார்.
கவர்னர் சல்மான் டசீரை கொலை செய்த மும்தாஜ் காத்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு வாரத்தில் டசீரின் மகன் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Average Rating