சேலம் அருகே வெடிச்சத்தம்: வீட்டுச் சுவர்களில் விரிசல்– ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது- பொதுமக்கள் பீதி…!!
சேலம் அருகே உள்ளது மேட்டுப்பட்டி தாதனூர். இந்த ஊரை சுற்றிலும் சிறிய கிராமங்கள் நிறைய உள்ளது. இந்த ஊரில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
இந்த சத்தத்தால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாறைகள் வெடிக்க யாரும் வெடி வைத்தார்களா? அல்லது மலைப்பகுதியில் யாரும் மண் எடுக்க வெடி வைத்தார்களா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த வெடிச்சத்தத்தால் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த மளிகை கடை வைத்துள்ள தர்மராஜன் என்பவரின் வீட்டு சுவர் விரிசல் விட்டது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் இதே ஊரை சேர்ந்த நடராஜன், செல்வம் ஆகியோரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்தது. இதை பார்த்து இவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நில நடுக்கம் ஏதும் ஏற்பட்டு இருக்குமோ என்றும் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். இதை அறிந்த காரிப்பட்டி போலீசார் உடனே மேட்டுப்பட்டி தாதனூர் வந்து விசாரித்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர். ஆனால் பொதுமக்கள் அமைதி அடையவில்லை. வெடிச்சத்தத்திற்கு காரணம் என்ன என்று தெரியவேண்டும் என கூறி சத்தமிட்டனர். பலரும் வீட்டுக்குள் போகாமல் ரோட்டில் நின்று இருந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜி.சுப்புலட்சுமி ஆகியோர் உடனே சம்பவ இடம் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர். வெடிச் சத்தம் குறித்து விசாரிக்கிறோம். யாரும் பயப்பட வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
இந்த வெடிச்சத்தம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் கந்தவேல், சிவக்குமார், கண்ணன் மற்றும் போலீசார் இடம்பெற்று விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–
நேற்று மாலை 3 மணி இருக்கும். அப்போது பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. நாங்கள் என்னவோ ஏதோ என அறிந்து வெடிச்சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தோம். ஆனால் அங்கு ஏதும் இல்லை. இந்த வெடிச்சத்தத்தால் சிலரின் வீடுகள் விரிசல் விட்டு உள்ளது. ஜன்னல் கண்ணாடியும் உடைந்து உள்ளது.
இந்த சத்ததிற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த சத்தத்தால் நாங்கள் யாரும் இரவு தூங்கவில்லை. நில நடுக்கம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விடிய விடிய தூங்காமல் இருந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Average Rating